Monday, 23 September 2013

எத்திசைப் பயணம்?















கொடுப்பதுமின்றி
எடுப்பதுமின்றி
புரிதலில் ஊறிய
பேச்சுக்கள்
உனக்குமெனக்குமான
உள்ள வாசல்கள்.

தொடுகையின் நேரத்தில்
சலனமற்ற உனது விரல்கள்
வசந்த காலப் பொழுதின்
புதிய தளிர்களாய்
என்னுள்.

உன் வேர்கள்
உனக்கான இடத்திலேயே
இருப்பதும் உன்
இலைகள் எனக்கான
இடத்தில் நிழல்
தருவதுமே காதலின் சாட்சி.

எனது வாழ்க்கை
பயணத்தில் நமது
பிரிவைக் கடக்கவல்ல
துடுப்பைப் பரிமாறிச்
சென்று கொண்டிருக்கிறாய்

எனக்கெதிரான திசையில்.

Thursday, 19 September 2013

நிறமில்லா மழை


சொல்லாத நிறத்தில் நினைவுகள்
சொல்லாத நிறத்தில் ஒரு மழை...
கருப்பு சட்டமிட்ட ஜன்னலுக்கு வெளியே
நான் வானம் பார்த்து கொண்டு இருந்தேன்
எல்லாரும் சொல்வது போல
அது நீல நிறமாக இல்லை
அதன் நிறம் எனக்கு நினைவில்லாத
ஒரு நிறமாகவே இருந்தது
மேகங்கள் அற்ற வெறுமையான
வானத்தில் சில நட்சத்திரங்கள் இருந்தன
நீ வரும்போதெல்லாம் வானத்தின்
நிறத்திலேயே உடையணிந்து வருவாய்..
பின்னர் பிரிந்து இருந்த ஒரு தருணத்தின்
உரையாடலின் போது
நிறம் என்று ஏதுமில்லை என்றும்
அது ஒரு அடையாளம் என்றும் பேசினோம்...
நான் அடையாளம் கண்டு கொண்ட
நிறங்களில் வானம் இருந்த போதெல்லாம்
கருப்பு சட்டமிட்ட சன்னல்களுக்கு

வெளியே மழை இருந்தது...

Sunday, 1 September 2013

அப்பா...
















கரு கொடுத்து உருவாக்கினாய்
விரல் பிடித்து நடை பழக்கினாய்
கண்டிப்புடன் கல்வி தந்தாய்
பணிவுடன் பாசமும் பொறுமையும் தந்தாய்
நம்பிக்கையுடன் கல்லூரி செல்கையில்
தைரியம் என்ற ஆயுதம் பழக செய்தாய்
தன்னம்பிகையுடன் பணிக்கு செல்லும்போது
தன் கடமை முடிந்ததாய் 
உன் இதயம் ஓய்வு எடுத்தபோதும் 
தவித்து நின்றால் உன் முயற்சிகள் 
தோற்றுவிடும் – என நீ கற்றுதத்த 
பாடங்களின் உதவியுடன் உன் ஆசிர்வாதங்களுடனும்
என் ஆயுளுக்கும் ஓடி கொண்டிருப்பேன்.
உன் மரணம் கூட எனக்கு பாடம் தந்தது,  என் தந்தையே!!!

Friday, 30 August 2013

மருந்திட்ட எழுத்து...














கவிதையால் 
கையை சுட்டுக் கொண்டேன். 
காயங்கள் 
ஆறாது வலித்தன. 
எழுத்துகள் 
சில எடுத்து மருந்திட்டேன். 
கற்பனைகளோ 
கண்ணீராய் எட்டி பார்த்தன. 
ஒவ்வொரு கணமும் 
காயங்கள் கரைந்தே வந்தன. 
இருந்த கைகளில் 
இருப்பு ஏதுமின்றி முழுதும் கரைந்தன. 
இப்பொழுது 
காயமுமில்லை. 
கவிதைகளுமில்லை. 

கைகளுமில்லை....

Tuesday, 27 August 2013

கனவொன்று கண்டேன்





















கனவொன்று கண்டேன்

அதில் நான் கரையக் கண்டேன்
இப்படி ஒரு கனவென்றால்
எப்படி கண் விழிப்பேன்

கருவறையின் இருட்டில்
சிறிதாய் ஓர் ஒளி கண்டேன்
என் இதயத்தோடு ஒன்றாய்
கூடித் துடிக்கும் இருநாடி கேட்டேன்

வளராத வயிற்றை கூட
மெதுவாய் தடவிப் பார்த்தேன்
கேளாத மழலையில்
அம்மா என்று ஒரு மொழி கேட்டேன்

விடிந்ததும் கலைந்த
என் கனவே
இனி உன்னை சுமக்க

எத்தனை கனவுகள் வேண்டுவேன்...?

இரவில் பெய்த மழை.....


நேற்றிரவு பார்க்கத் 
தவறிய மழை 
கண்ணில் படும் 
நிலப்பரப்பெங்கும் 
தன் ஆளுமையை 
நிரப்பி இருந்தது  
கம்பி வேலியில் 
செடி ,கொடிகளில் 
முத்து முத்தாக... 

ஒரு மரத்தின்
கீழே நின்று 
ஒருமுறை உலுக்கிவிட்டு 
லேசாய் 
நனைந்து கொண்டபோது 
ஈரம் சுமந்த மனம் 

ஏன் லேசானது?

Monday, 26 August 2013

அணு அணுவாய்
















இங்கே இயல்பாயிருத்தல்
இயலாதெனினும்
அதை விடுத்து
பறந்துபோகும் ஆசையோ
பிறிதொரு வண்ணச்சிறகுகள்
பற்றிய
கனவுகளோ ஏதுமில்லை

காற்றில் கரையும்
உயிரை
தேடித்தேடி
சேகரிக்கிறேன்
அள்ளிக்கொஞ்சவோ

அணு அணுவாய்க்கொல்லவோ…