Tuesday 8 October 2013

குழந்தையின் படகு...



பிஞ்சு கைகளிலே காகிதம் படகாய்
மாறி கடலாகி போன மழை நீரில்
மிதக்க தயாராய் 

விட்ட படகு மெல்லிய காற்றின் 
திசையில் செல்ல தன் கண்டுபிடிப்பின் 
வெற்றியை குழந்தை ரசிக்க 

வந்தது எங்கிருந்தோ மழை 

விழியோரம் கண்ணீர் நெஞ்சிலோ 
சொல்லமுடியாத வலி தன் முன்னே
தன் படகு தண்ணீரில் முங்குவதை
காண சகிக்க முடியாத குழந்தைக்கு 

ஆனால் காகித படகோ வாழ்க்கை 
தத்துவத்தை மிக எளிதாக புரிய வைத்தது 
அருகில் நின்று அதை பார்த்து 

கொண்டிருந்த வாலிபனுக்கு.. 

Monday 7 October 2013

உனக்கான காத்திருப்பு...



உன் நினைவுகளின் 
அழுகைக்குள் 
என் நினைவுகள் 

தண்டவாளத்தில் 
பயணிப்பதுபோல் 
திருப்பங்களில்லாத 
பயணங்களில் 

இணையவேண்டிய இடம் வரை 
இரட்டையாகவே 
ஓடிக்கொண்டிருக்கின்ற தெருக்களில் 
சொல்லிக்கொள்ளாத மௌனம் 

இறங்குதலும் ஏறுதலுமான 
பயணங்களில் 
மீண்டும் ஒரு முறை 
சந்திக்க நேரலாம் 

அப்பொழுதாவது சொல்லி விடு 
பதில் தெரியாத 
கேள்விகளுக்குத்தான் 
நீண்ட அர்த்தங்கள் 

ஏதாவது சொல்லி விடு 
மௌனித்து விடாதே 
உன் மௌனத்துக்குப் பின் 
மீண்டும் ஒரு சந்திப்புக்காக 
நான் காத்திருக்க நேரலாம் 

Thursday 3 October 2013

உனக்கான வரிகள்



















நான் யாருக்கேனும் எழுதும் வரிகளிலும் உனக்கான வார்த்தைகள் இருக்கும் நீ யாருக்கேனும் இசைக்கும் கானத்திலும் எனக்கான இதமிருக்கும் அடையாளம் காணும் ஆழ் பரப்பில் அர்த்தப்படுகின்றன எல்லா வரிகளும் எல்லோருக்குமான பாடல்களும்.

Monday 23 September 2013

எத்திசைப் பயணம்?















கொடுப்பதுமின்றி
எடுப்பதுமின்றி
புரிதலில் ஊறிய
பேச்சுக்கள்
உனக்குமெனக்குமான
உள்ள வாசல்கள்.

தொடுகையின் நேரத்தில்
சலனமற்ற உனது விரல்கள்
வசந்த காலப் பொழுதின்
புதிய தளிர்களாய்
என்னுள்.

உன் வேர்கள்
உனக்கான இடத்திலேயே
இருப்பதும் உன்
இலைகள் எனக்கான
இடத்தில் நிழல்
தருவதுமே காதலின் சாட்சி.

எனது வாழ்க்கை
பயணத்தில் நமது
பிரிவைக் கடக்கவல்ல
துடுப்பைப் பரிமாறிச்
சென்று கொண்டிருக்கிறாய்

எனக்கெதிரான திசையில்.

Thursday 19 September 2013

நிறமில்லா மழை


சொல்லாத நிறத்தில் நினைவுகள்
சொல்லாத நிறத்தில் ஒரு மழை...
கருப்பு சட்டமிட்ட ஜன்னலுக்கு வெளியே
நான் வானம் பார்த்து கொண்டு இருந்தேன்
எல்லாரும் சொல்வது போல
அது நீல நிறமாக இல்லை
அதன் நிறம் எனக்கு நினைவில்லாத
ஒரு நிறமாகவே இருந்தது
மேகங்கள் அற்ற வெறுமையான
வானத்தில் சில நட்சத்திரங்கள் இருந்தன
நீ வரும்போதெல்லாம் வானத்தின்
நிறத்திலேயே உடையணிந்து வருவாய்..
பின்னர் பிரிந்து இருந்த ஒரு தருணத்தின்
உரையாடலின் போது
நிறம் என்று ஏதுமில்லை என்றும்
அது ஒரு அடையாளம் என்றும் பேசினோம்...
நான் அடையாளம் கண்டு கொண்ட
நிறங்களில் வானம் இருந்த போதெல்லாம்
கருப்பு சட்டமிட்ட சன்னல்களுக்கு

வெளியே மழை இருந்தது...

Sunday 1 September 2013

அப்பா...
















கரு கொடுத்து உருவாக்கினாய்
விரல் பிடித்து நடை பழக்கினாய்
கண்டிப்புடன் கல்வி தந்தாய்
பணிவுடன் பாசமும் பொறுமையும் தந்தாய்
நம்பிக்கையுடன் கல்லூரி செல்கையில்
தைரியம் என்ற ஆயுதம் பழக செய்தாய்
தன்னம்பிகையுடன் பணிக்கு செல்லும்போது
தன் கடமை முடிந்ததாய் 
உன் இதயம் ஓய்வு எடுத்தபோதும் 
தவித்து நின்றால் உன் முயற்சிகள் 
தோற்றுவிடும் – என நீ கற்றுதத்த 
பாடங்களின் உதவியுடன் உன் ஆசிர்வாதங்களுடனும்
என் ஆயுளுக்கும் ஓடி கொண்டிருப்பேன்.
உன் மரணம் கூட எனக்கு பாடம் தந்தது,  என் தந்தையே!!!

Friday 30 August 2013

மருந்திட்ட எழுத்து...














கவிதையால் 
கையை சுட்டுக் கொண்டேன். 
காயங்கள் 
ஆறாது வலித்தன. 
எழுத்துகள் 
சில எடுத்து மருந்திட்டேன். 
கற்பனைகளோ 
கண்ணீராய் எட்டி பார்த்தன. 
ஒவ்வொரு கணமும் 
காயங்கள் கரைந்தே வந்தன. 
இருந்த கைகளில் 
இருப்பு ஏதுமின்றி முழுதும் கரைந்தன. 
இப்பொழுது 
காயமுமில்லை. 
கவிதைகளுமில்லை. 

கைகளுமில்லை....

Tuesday 27 August 2013

கனவொன்று கண்டேன்





















கனவொன்று கண்டேன்

அதில் நான் கரையக் கண்டேன்
இப்படி ஒரு கனவென்றால்
எப்படி கண் விழிப்பேன்

கருவறையின் இருட்டில்
சிறிதாய் ஓர் ஒளி கண்டேன்
என் இதயத்தோடு ஒன்றாய்
கூடித் துடிக்கும் இருநாடி கேட்டேன்

வளராத வயிற்றை கூட
மெதுவாய் தடவிப் பார்த்தேன்
கேளாத மழலையில்
அம்மா என்று ஒரு மொழி கேட்டேன்

விடிந்ததும் கலைந்த
என் கனவே
இனி உன்னை சுமக்க

எத்தனை கனவுகள் வேண்டுவேன்...?

இரவில் பெய்த மழை.....


நேற்றிரவு பார்க்கத் 
தவறிய மழை 
கண்ணில் படும் 
நிலப்பரப்பெங்கும் 
தன் ஆளுமையை 
நிரப்பி இருந்தது  
கம்பி வேலியில் 
செடி ,கொடிகளில் 
முத்து முத்தாக... 

ஒரு மரத்தின்
கீழே நின்று 
ஒருமுறை உலுக்கிவிட்டு 
லேசாய் 
நனைந்து கொண்டபோது 
ஈரம் சுமந்த மனம் 

ஏன் லேசானது?

Monday 26 August 2013

அணு அணுவாய்
















இங்கே இயல்பாயிருத்தல்
இயலாதெனினும்
அதை விடுத்து
பறந்துபோகும் ஆசையோ
பிறிதொரு வண்ணச்சிறகுகள்
பற்றிய
கனவுகளோ ஏதுமில்லை

காற்றில் கரையும்
உயிரை
தேடித்தேடி
சேகரிக்கிறேன்
அள்ளிக்கொஞ்சவோ

அணு அணுவாய்க்கொல்லவோ…

Friday 23 August 2013

கதை...











எனக்கொரு கதைச் சொல்லு
என்றாள் அமுதா.
கதையில்..
ஏழு கடல்கள் இடியுடன் கூடிய புயல் தீ கக்கும் டிராகன் இவர்களுடன் இருக்கட்டும் அரக்கனைப் பரிகாசம் செய்யும் ஒரு சின்னப் பச்சைக்கிளி. முடிவில்லாத சிக்கலான பாதை வெளிவரமுடியாமல் ஒவ்வொரு படியிலும் தடைக்கற்கள் பயப்படவில்லை. இந்த மாதிரிக் கதைகளை எனக்குத் தெரியும்.
எல்லா கதைகளிலும் எப்போதும் கடைசியில் இனிமையாக வாழ்ந்ததாக முடிவு வரும் என்று.

ஓடம் அழைக்கிறது...















ஒரு தீவு
ஒரு நிலவு
ஒற்றை மரம்
கரையில் ஓடம்

காத்திருக்கிறேன்
நான் மட்டும்

கலைத்துப் போகும்
காற்றைப் போல்...
என் முடிஅலையும்
உன் கைகளுக்காகவே

பின்னி விடும்
என் கூந்தலையும், என்னையும்
கோர்த்துக்கொள்
உன் விரல்களில்

நான்
தீட்டி வந்த கண்மை...
என்னை பின்னிப்போடும்
உன் விழிகளுக்காகவே

வட்ட நிலவொளியில்
வையகம் மறந்திடலும்
கவிதை விரல்களால்
மெய்க் காவியம் எழுதிடலும்
ஓசையற்ற இசைப் பயணம்

ஓடம் அழைக்கிறது
வா போய் வரலாம்


அக்கரைக்கு...